அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

25.08.2025
34. ‘கொல்கொதா வெற்றிக்கொடி’ நடத்தும் கெத்சமனே!
கெத்சமனேயில், இயேசு வடித்த வியர்வையின் உழைப்பிற்கு கிடைத்த பலன்.... தன் சொந்த ஜீவனை ‘இரத்தத்தின் பெருந்துளிகளாய்’ தரையிலே விழ வைத்தது! அவரது வியாகுலமெல்லாம், “என்னுடைய சித்தமல்ல..... உம்முடைய சித்தமே!” என்ற ஜெபமேயாகும். கெத்சமனேயில், தன் சொந்த ஜீவனை இழந்தவர்.... இந்த ஜெபமே, அவர் தன் சொந்த ‘சுயத்தை வெறுத்து’ பிதாவின் சித்தம் நிறைவேற்ற ‘கொல்கொதா மலை ஏறிட’ நடத்தியது! இவ்வாறு நாம் சொல்வதைவிட மிக உயர்ந்த நிலை என்னவென்றால், “அவர் மரணத்தை பரிகரித்து, உயிர்த்தெழுந்த ஜீவனின் வெற்றியை” அவர் கொல்கொதாவில் நிலைநாட்டிய வெற்றிக்கொடி எனக் கூறலாம்!
நமக்கொரு கெத்சமனே இல்லையேல், சிலுவை பயணமும் இல்லை! ஜெயத்தின் கொடி நாட்டும் கொல்கொதா சிகரமும் இல்லை! பசுமை வாழ்வும் இல்லை! பரிபூரண வாழ்வு கண்டவனின் நாவுகளே “ஓ, எனது ஆசீர்வதிக்கப்பட்ட கெத்சமனே!” என தானாக முணுமுணுக்கும்!!
- ரத்னம்
