அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
09.12.2024
50. தேவனை விட்டு நாம் விலகுவது கூடாது!
தேவன் நம்மை விட்டு ‘முதலாவது’ என்றுமே விலகுவ தில்லை! மாய அன்பை நாடும் நமது கேடான ஆத்துமா தேவனை விட்டு விலகப்பார்ப்பதுதான் துரதிருஷ்டம். நாம் அவரை விட்டு விலகுவதும் ஒன்றுதான்...... அழிவதும் ஒன்றுதான்! அவரை விட்டு விலகுவது காரிருள் பிரவேசமாயும்! மரணத்தைக் கொண்டு வரும் ‘தெய்வ அன்பை’ இழந்த குளிர்ச்சியாயும்! இருக்கும்.
இதிலிருந்து மீள்வது, ஒருவனுடைய ஆழமான மனந் திரும்புதலைச் சார்ந்தே இருக்கிறது. அவன் மனந்திரும்பி அவரண்டை நெருங்கும்போது, தேவனும் அவனண்டை நெருங்குவார்! இந்த சமயத்தில், மீண்டும் காரிருளில் ஒளி தோன்றுவதும்! குளிர்ந்து போன இருதயத்தில் வெப்பம் தோன்றுவதும்! நிகழும். படிப்படியாய் தேவனோடு கொண்ட ‘ஜெப உறவே’ அவனை சீர்ப்படுத்தும். நாம் விலகும்போது தேவன் விலகுவதும், நாம் கிட்டிச்சேரும் போது தேவன் கிட்டிச் சேருவதும், சர்வ வல்லவரின் தயவு என்றே சொல்ல வேண்டும்!
- ரத்னம்