அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

06.04.2026 துளிகள் - 14
‘தெய்வ அன்பை’ கண்டவர்கள், அவரை விட்டு விலகமாட்டார்கள்!
அவருடைய தெய்வீக மகிமையை தனது அனுபவத்தில் கண்ட ஒருவன், ஒருபோதும் அவரைவிட்டு விலகவே மாட்டான். அவர் நம்மைத் தமது அன்பால் ஆண்டுகொள்ளுகிறார். நாமும் அவரை முழுவதுமாய் பற்றிக்கொள்ளுகிறோம்! கிறிஸ்துவின் மகிமையை அறிந்த விசுவாசிகள் எல்லாவற்றிற்கும் மேலாக அவரையே தங்களுக்குப் பொக்கிஷமாக்கிக் கொள்ளுகிறார்கள். அவரே நிமிஷந்தோறும் அவர்களுக்குள் ஜீவனாக விளங்குகிறார்! அவர்கள் எண்ணம், நோக்கம், எழுத்து, பேச்சு, முயற்சிகள் யாவும் கிறிஸ்துவே. ‘எனக்கு எல்லாம் இயேசுவே’ என்று விசுவாசி பாடுகிறான். பரலோகத்தில் அவரையல்லாமல் அவனுக்கு யாருண்டு? பூலோகத்தில் அவரைத்தவிர அவனுக்கு வேறே விருப்பமில்லை! இவ்வாறு கிறிஸ்துவும் விசுவாசியும் இணைக்கப்படுவதே கிறிஸ்து மார்க்கம். அவ்வாறான உயிருள்ள ஐக்கியத்தை, பிரிக்க முடியாத தெய்வ உறவை உண்டு பண்ணுவதையே எந்த தேவ ஊழியனும் செய்வான்! அவன் பணியாற்றும் கிறிஸ்துவின் சபையும் நிறைவேற்றும்!
- ரத்னம்
