அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

09.03.2026 துளிகள் - 10
தற்காலத்து மனுஷீக வேத ஞானம், வேத இனிமையை பாழாக்கும்!
“வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கின்றன; தேவனுடைய பரிசுத்த மனுஷர் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” (2தீமோ.3:16, 2பேதுரு1:21). தேவனே, பற்பல காலங்களிலிருந்த பல மனுஷரைக் கொண்டு வேதாகமத்தை எழுதும்படிச் செய்தவர். இதுவே வேதாகமத்தின் ஆச்சரியமான ஒற்றுமைக்குக் காரணம். வேதாகமத்தின் மொத்தப் பொருள் கிறிஸ்து! வேதத்தையும் கிறிஸ்துவையும் பிரிக்க முடியாது. பிரித்தால், வேதாகமம் விளங்காத புஸ்தகமாகிவிடும்! ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் வரை நிறைந்திருப்பவர் கிறிஸ்துவே. “புஸ்தகச் சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிற தென்றும், வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகள் அவைகளே” என்றும் ஆண்டவர் தாமே சொன்னார்.
தற்காலத்து உபதேசப் பண்டித சாதுரிய ஞானம், சபைகளுக்கு நாசம்! இந்த விஷம் எங்கும் பரவி அநேகர் ஆதிவிசுவாசத்தை இழந்து தடுமாறுகிறார்கள். பூர்வ விசுவாசம் தழைத்தாலொழிய, பூர்வ தெய்வ ஆசீர்வாதம் வரப்போகிறதில்லை!
- ரத்னம்
