அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

15.06.2026 துளிகள் - 24
தீமைக்கு நன்மை செய்வது எளிது! அதுவே நம் மகிழ்ச்சி!
தீமைக்கு நன்மை செய்ய வேண்டுமென சத்தியவேதம் கூறுவதை நாம் யாவருமே அறிந்திருக்கிறோம். ஆம், நாம் சந்திக்கும் தீமைகளே உபத்திரவத்திற்குக் காரணமாய் உள்ளன. இதுவே நமக்கு இப்போது பரீட்சையாகவும் உள்ளது. இவ்வேளையில், அத்தீமைக்கு நான் நன்மை செய்துவிட்டால், அதுவே இந்த பரீட்சைக்கு விடையாகி, நம்மை ஆனந்தக் களிப்பில் ஆழ்த்திவிடுகிறது! இவ்வாறு, நான் என்ன செய்ய வேண்டுமென சத்திய வேதம் கூறுவதை நான் செய்துவிட்டால், அதுவே ‘மகிழ்ச்சியின் அலை உச்சிக்கு’ என்னைத் தூக்கிச் செல்லுகிறது!
இதற்கு மாறாக ஜனங்கள் செயல்படுவதால், அவர்களும் தீமையின் அலைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, “எனக்கு இழைக்கப்பட்ட தீமையின் பயங்கரம் மகா கொடியது.... இது போன்ற கொடிய தீமையை அவர்கள் எனக்கு எப்படிச் செய்யலாம்?....” என்றெல்லாம் புளுங்கித் தவிக்கிறார்கள். இப்படி யெல்லாம் நீங்கள் புளுங்குவதும்.... தவிப்பதும்.... வேதத்தில் எங்கேயாவது எழுதியிருக்கிறதா? நீங்கள் தீமைக்கு நன்மை செய்ய வேண்டும் என்று மட்டும்தானே எழுதியிருக்கிறது! அப்படியானால், ஓர் நன்மை செய்வதற்கு யாரும் புளுங்கித் தவிக்கத் தேவையில்லையே!?
- ரத்னம்
