அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!! (சங்கீதம்.33:9)
நீர் ஒரு வார்தை சொல்லும் அது போதும்.....
நீண்ட செய்திகள் அல்ல.... இதயத்தில் விழும் குளிர்ந்த ‘பனித்துளிகளான
இந்த துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!

01.06.2026 துளிகள் - 22
நம் தியான நேரமே, அவர் வழங்கும் வளர்ச்சி!
கிறிஸ்துவில் நிலைத்திராத ஜீவியமும் ஊழியமும் செடியிலிருந்து விலகிய கொடிபோல வீணாகுமென்பது நிச்சயம்! அப்படியானால் நிலைத்திருக்கும்படி நாம் செய்ய வேண்டியதென்ன? இந்த உவமையை வாசிக்கும்போதே சில குறிப்புகளும் காணப்படுகின்றன: ‘என்னில் நிலைத்திருங்கள்’ என்று ஆண்டவர் திரும்பத் திரும்ப கூறினார். நாம் குளிரில் போய் வெகுநேரம் உட்கார்ந்திருந்தால் நமது தேகம் குளிரால் நடுங்கும்! நாம் வெயிலில் வெகுநேரமிருந்தால் நமது தேகம் உஷ்ணமேறிக் கொதிக்கும்! இதுபோலவே, நாம் கிறிஸ்துவின் சமூகத்தில் அமரிக்கையாய் காத்திருக்கும்போது அவருடைய திவ்விய சமூகம் நம்மை ஆண்டுகொள்ளுகிறது! அவருடைய பாதபடியில் எவ்வளவுநேரம் செலவழிக்கிறோமோ அவ்வளவுக்கு அவருடைய சாயலுக்கொப்பாக மாறுகிறோம்.
அவரில் நிலைத்திருந்து ஜீவிப்பதற்கு, அவர் சமூகத்தில் காத்திருந்து ஜெபித்திடும் தியானம், எவ்வளவு அவசியம் என்பதை உணர்கிறோம்!
- ரத்னம்
