நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

05.03.2026 10வது வாரம்
சிலுவை பாதையில் ‘இயேசு பதித்த’ அன்பின் ஜெய கொடி!

கெத்சமெனேயின் வியாகுல ஜெபம், கூடவேயிருந்த சீஷனின் துரோகம், ஆலோசனை சங்கத்தின் குற்றச்சாட்டுகள், சிரசில் முள்முடி, பாரச்சிலுவை, வஸ்திரமின்றி அவமானம், கள்வரோடு கள்வராக நிந்தை, சுற்றியிருந்தவர்களின் பரிகசிப்பு..... என்றெல்லாம் துன்பங்கள் குவிந்த யோவான் 18,19-ம் அதிகாரத்தில் “அவமானத்தை எண்ணாமல், இயேசு எப்படி சிலுவையை சகித்தார்?” என்பதற்குரிய இரகசியத்தை, அதற்கு முந்திய 17-ம் அதிகாரத்தில் கூறியுள்ளார்: “பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன்பே நீர் என்னில் அன்பாயிருந்த படியினால்...” என யோவான் 17:24 - ம் வசனத்தில் இயேசு கூறிய அறிக்கையே அந்த இரகசியம் ஆகும்!
முழு உலகமும் எதிர்நின்று துன்பத்தையும், கசப்பையும் உமிழ்ந்தால் என்ன? இவ்வித கொடிய சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பே, என்னில் நிரந்திரமாயிருக்கும் “பிதாவின் அன்பின் பாதுகாப்பு” நமக்கு உயர்ந்த அடைக்கலமும், ஆறுதலுமாயிருக்கிறது. ‘பிதாவின் அன்பு’ என்ற இந்த மார்பு கவசத்தைப் பெறாததாலேயே, இன்று அநேகர் ‘அக்கினியாஸ்திரம்’ போன்ற துன்பங்களின் சுழற்சிக்குள் சிக்கி மூழ்கிப் போகிறார்கள் (1தெச.5:8,எபே.6:16). ஆனால், உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவன் தங்களிடம் வைத்த பிதாவின் அன்பின் பாதுகாப்பில் வெளிப்பாடு பெற்றவர்கள் “அவர் சித்தப்படி என்ன நடந்தாலும்.... தங்களில் அன்புகூருகிறவராலே முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறோம்!” (ரோமர்.8:37) என முழங்கி, தேவன் தங்கள் மீது வைத்த அன்பிற்கு ஜெயக்கொடி ஏற்றுவார்கள். உண்மை சீஷனின் ஜெயம் இங்குதான் அளவிடப்படுகிறது!
- ரத்னம்
