நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

30.07.2026 31வது வாரம்
புனிதனாய் வாழ்பவன் ‘பிறரை’ புனித ஜீவியத்திற்கு அழைப்பான்!

புனிதராய் வாழும் யாவருமே ‘அந்நியரும் பரதேசியுமாகவே’ இந்த உலக பயணத்தை பயணித்திட அழைக்கப்பட்டவர்கள். இந்தப் பயணம், தன் காலினால் நடந்துவரும் பயணமல்ல..... அது, இருதயத்திற்குள் நடந்து வரும் பயணமேயாகும். ஆம், அவன் தனது சொந்த ஆத்துமாவின் தோட்டத்திலேயே தேவனோடு பயணிக்கிறான்! அங்கு தேவனைத் தவிர வேறு யார் பயணித்திட முடியும்? கர்த்தருடைய ஆலயத்தில் கூடிவரும் திரளான ஜனங்களை விட, இவன் பெற்ற ஆவியின் உணர்வோ முற்றிலும் வேறுபாடு கொண்டதே யாகும். அந்த திரள் ஜனங்கள் கர்த்தருடைய வழியை கேட்டிருப்பார்கள். ஆனால் இவனோ ‘அதை’ கண்டிருக்கிறான்! அன்று யோவான் ஸ்நானகனுடைய தந்தை சகரியா கர்த்தருடைய பலிபீடத்திலிருந்து திரும்பி வந்தபோது, ஜனங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு “இவன் ஒரு தரிசனத்தைக் கண்டான்!” என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதைப் போலவே, இவனுடைய நடையுமிருக்கும் (லூக்கா 1:22). ‘புனிதம் நாடும்’ ஜனங்கள் மாத்திரமே, அந்த புனிதன் நடத்தும் அடிச்சுவடுகளை பின்பற்றி வருவார்கள்!
அவன் ஜனங்களைக் கண்டு “உங்கள் முழுமையும் கர்த்தருக்கு அர்ப்பணியுங்கள்” என கேட்பானேயல்லாமல், தனக்கென சிறிது பங்கு கூட கேட்டிட மாட்டான்!
- ரத்னம்
