நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

28.08.2025
35. ‘கொடுக்கும் மனது’ நிறைவான பாக்கியம்!

தேவை! பசியுள்ள மக்கள்! என வரும்போது இயேசு ஜனங்களிடத்தில் திரும்பாமல், சீஷர்களிடமே திரும்பி “நீங்கள் கொடுங்கள்!” என்றார்! (மத்தேயு.14:16). 200 பணம் வேண்டும், அது இல்லையே..... என தயங்கிய சீஷர்களிடம் “பணமா வேண்டும்? கொடுக்கும் மனம் அல்லவோ வேண்டும்!” என எதிர்நோக்கி நின்ற இயேசுவிடம், ஒரு சிறு பையன் ‘5 அப்பமும் 2 மீனும்’ மனம் உவந்து கொடுத்தான்!
கொடுத்து வாழும் பாக்கியத்தை, தன் மகனுக்கும் கற்றுத்தந்த அந்த பெற்றோர்கள் பாக்கியவான்கள்! அந்த சிறுவனும், அவன் பின்னணியில் நின்ற அவன் பெற்றோர்களும் வேத வசனத்தில் இடம் பெற்றார்களே! (யோவான்.6:9)...... அந்த செயல், உலகமெங்குமுள்ள “சிறுவர் ஞாயிறு பள்ளியில்” தொனித்துவிட்டதே! கொடுப்பதற்குரிய மனம், நாம் யாவரும் கற்றிட வேண்டிய பாக்கியம்!!
கொடுத்த 1/2 சாப்பாட்டை, ஆசீர்வதித்த தேவ கரம், 5000- பேருக்கு கொடுத்து கொடுத்து பசி தீர்த்து திருப்தியாக்கினார்! ‘எனது கொடுக்கும் மனம்’ இயேசுவோடு இணைந்துவிட்டால்.... விந்தையான நிறைவும், விண்ணகத்து ஆசீர்வாதமும், நம் சொந்த ஜீவியத்திலும், குடும்ப ஜீவியத்திலும், சபை ஜீவியத்திலும், நம் வாழ்நாளெல்லாம் சாட்சியாய் கண்டு, ருசித்து, மகிழ்ந்திட முடியும்! ஆம், கொடுத்திடும் மனமே இறைவனின் மனம்..... அதுவே, நமக்கும் நம் குடும்பத்திற்கும் நம் சபைக்கும் நிறைவான ஆசீர்வாதம்! (மாற்கு 6:42,43) ஆமென்.
- ரத்னம்
