நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

19.03.2026 12வது வாரம்
‘பூச்சிபோல்’ கொட்டுபவர்களை, எதிர்கொள்ளவும் துணிவு வேண்டும்!

பரிசுத்தவான் தாமஸ்கெம்பிஸ் அவர்கள் கூறும்போது: “என்னுடைய சமாதானத்தை, மனுஷனுடைய நாவை சார்ந்து கொள்ளாதிருக்க பல வருடங்களுக்கு முன்பாகவே தீர்மானித்தேன்! மனுஷர்கள் நம்மை நியாயந்தீர்ப்பது நன்மையாயிருந்தாலும் அல்லது தீமையாயிருந்தாலும் அவர்களைக் குறித்து நமக்கு கணக்கு இல்லை... நம்மிடம்தான் கணக்கு கேட்கப்படும்!” என கூறினார்.
எந்தவொரு கிறிஸ்தவனும் முதலாவது தகுதிபெற வேண்டிய இடம் “மற்றவர்களால் தீது பேசப்பட” தன்னை தயார் நிலையில் வைத்துக் கொள்வதுதான்! நீங்கள் ஒன்றும் செய்யாதிருந்தால் “சோம்பேறி” என தீது மொழி கேட்கும்! எதையாகிலும் ஒன்றைச் செய்தால் “இவைகளை ஏன் செய்யவில்லை?” என தீதுமொழி கேட்கும்! நீங்கள் மெய்யாய் கிறிஸ்துவின் சீஷர்களாகவோ அல்லது அவரது ஊழியர்களாகவோ இருந்தாலும், உங்களைச் சுற்றியுள்ள ஜனங்களில் சிலர் “பூச்சியைப் போல்”நிற்பார்கள். பூச்சி நிற்பதை காண முடியாது. ஆனால், அவ்வப்போது கொட்டும் போது ‘அந்தப் பூச்சிகளை’ காண்பீர்கள்! ஓர் உத்தம கிறிஸ்தவனாய், பரிசுத்த ஜீவிய பயணம் செய்யத் துணிந்தவன், தன் பயணத்தில் துன்புறுத்தும் பூச்சிகளையும் தாண்டி வர, கண்டிப்பாய் மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டும்!
- ரத்னம்
