நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
8.04.2021 | 4. கடின சுயம் ‘உடைந்தவன்’ உயிர்த்த இயேசுவின் ஜீவன் பெறுவான்! |
ஓர் கோதுமை மணியின் ஜீவன், அதன் உள்பகுதியிலேயே இருக்கிறது. ஆனால், அந்த கோதுமை மணியின் வெளிப்புறமோ ஓர் கடினமான தோலை உடையதாயிருக்கிறது. அந்த கடினத்தோல் உடைந்து பிளந்திடாத பட்சத்தில் கோதுமைச் செடி முளைக்கவே முடியாது. கோதுமைமணி சாவதை ஆண்டவர் குறிப்பிடும்போது, நிலத்தின் மண்ணில் கோதுமை மணியானது சீதோஷ்ண நிலை மற்றும் நீர் நிலை போன்ற ஏதுக்கள் மூலமாய் அதனுடைய கடினத்தோல் உடைந்து பிளந்த பின்புதான் கோதுமைச்செடி முளைக்கத் தொடங்குகிறது. எனவே இவ்வசனத்தில் உள்ள முக்கியத்துவம் யாதெனில், கோதுமைமணிக்குள் ஜீவன் இருக்கிறதா என்றல்ல.... மாறாக, அதன் வெளிப்புற கடினத் தோல் உடைந்து பிளந்து விட்டதா? என்பதே கேள்விக்குறியாயிருக்கிறது.
தேவனை மெய்யாய் சேவிக்கிற யாராயிருந்தாலும், அவருடைய வல்லமையான கிரியைக்கு தடையாயிருப்பது, வேறு யாருமல்ல.... கடின சுயம் கொண்ட “தாங்கள்தான்” தடையாயிருக்கிறோம் என்பதை வெகு சீக்கிரத்தில் கண்டுபிடித்து விடுவார்கள்.