கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

18.02.2026
ஓ வாலிபனே, தெய்வ பயம் பேரின்பம்! உலக பயம் பேரழிவு!
காரிருள் சூழ்ந்திருந்தது. என் நண்பர்கள் சிலரோடு சற்று தூரத்திலுள்ள ஒரு ஊருக்குப் போய் கொண்டிருந்தேன். என் நண்பர்களுள் ஒருவர், “ஐயோ பாம்பு, ஐயோ பாம்பு” என்று சொல்லி அலறிக் கொண்டு பின்னாக ஓடிவிட்டார்!
நாங்கள் சற்று திகைப்படைந்து கவனமாகப் பார்த்தோம். அசையாமல் ஏதோ ஒன்று அங்கு கிடந்தது. ‘அது என்ன பாம்பு தானோ?’ என திட்டமாய் சோதனை செய்ய யாருக்கும் தைரியம் இல்லை.
கடுமையான இருள் சூழ்ந்திருந்தபடியால், எங்கும் சிதறிப்போக எங்களால் முடியாத சூழ்நிலை! பயந்து ஓடிப்போன நண்பனைப் போலவே எங்கள் உள்ளத்திலும் ‘படபடக்கும்’ பயம் ஆட்கொண்டது! நான் ஒரு நீண்ட கம்பை எடுத்து அந்த சுருண்டு கிடந்ததை மெதுவாக அசைத்துப் பார்த்தேன். உண்மையை அறிய முடியவில்லை. எச்சரிக்கையோடு கிட்டப்போய் பரிசோதித்தேன். அப்போதுதான், அது ஒரு கயிறு என்று கண்டேன்!
நாங்கள் சென்ற கூட்டத்தில் பயந்து ஓடிய அந்த நண்பன், திரும்பிவந்து பங்கெடுக்க வரவேயில்லை. ஒரு பொய்யான தோற்றம் ‘பயத்தை கொண்டு வந்து’ அவனை விரட்டிவிட்டதே என வருந்தினேன்! அப்போதுதான் நான் பின்கண்டவாறு சிந்திக்கலானேன்:
‘மலைபோல்’ இந்த லோகக் கவலையிருந்தாலும் ‘தெய்வ கிருபையின் வெளிச்சம்’ அவை யாவற்றையும் அகன்று போகச் செய்துவிடும்! மானிடப் பிறவிக்கு, கண் இருந்தாலும், வெளிச்சம் இல்லை என்றால், அவன் ஒன்றையும் நிஜமானதாய் காண முடியாது! இந்த மாய உலகம் ‘பயம்’ எனக்கூறி மிரள்வது அனைத்துமே உண்மைக்கு புறம்பான ‘மாயை’ என அறிந்து கொள்வது நல்லது! அதுபோல, சத்திய வெளிச்சமின்றி நம் இதயக் கண்களும் குருடாகவே இருக்கும்! “நானே வெளிச்சம்” என அழைக்கும் இரட்சகரை அண்டிக்கொண்டு, உலகத்தின் பாவ பயம் நீங்கி ‘தெய்வ பயத்தோடு’ வாழ்ந்திட தேவன் கிருபை செய்வாராக!
- வாலிபம் இயேசுவுக்கே
